கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்கக் கோரி, இம்மாதம் 23ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக வடக்கு மாவட்ட தேமுதிக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் அழகர்சாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளனவாம். இதனால், வெளிநாடு செல்வதற்கும், பட்டா மாறுதல் மற்றும் அரசு உதவித் தொகைகள் பெறுவதற்கும் முடியாத நிலை ஏற்படுவதுடன், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெறுவதிலும் காலதாமதம் நிலவுகிறது.
எனவே, பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள மனுக்களை முறையாக காலதாமதமின்றி ஆய்வு செய்து, உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி இம்மாதம் 23ஆம் தேதி தேமுதிக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.