மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் பரமசிவம் செயல்விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில், நகராட்சி ஆணையர் அச்சையா, நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன், வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லை ஒட்டும் பணி அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பரமசிவன் முன்னிலை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) சந்திரசேகர், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமிசுந்தரி, துணை வட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.