ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்?: தமிழிசை கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு என்ன என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை என தமிழக பாஜக  தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை


ஸ்டெர்லைட் ஆலையின் நிலைப்பாடு என்ன என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை என தமிழக பாஜக  தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: திமுகவின் பிரதான தலைவர்களில் ஒருவர் நிற்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தேர்தல் அறிக்கையில் திமுக ஏன் குறிப்பிடவில்லை?
மாநிலங்களவை கூட்டங்களில் கனிமொழி 56 சதவீதம் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்ட கடைசி மூன்று பேரில் கனிமொழியும் ஒருவர்.
முழுமையாக மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். நீட் தேர்வு தமிழக மக்களுக்கு மிகவும் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புத் திட்டம் மூலம் அதிக பயனடைந்த மாவட்டம் தூத்துக்குடி ஆகும்.
பொது தளத்தில் பொது எதிரியை வீழ்த்துவதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜகவுக்கு முரணான சில கருத்துகளை பதிவு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இதில் இருந்தே அதிமுகவுக்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
விமானத்தில் வரும்போது தன்னிடம் நேர் எதிரே யாராவது பேசினால், அப்போது கருத்து சுதந்திரம் பற்றி கனிமொழிக்கு தெரிந்திருக்கும். 1975 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்ட நிலையில், அதே கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளதை திமுக நினைத்துப் பார்க்க வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தவறான கருத்துகளையும், வரம்பு மீறியும் தொடர்ந்து பேசி வருகிறார். இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுகவுக்கும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் உள்ள நிலைப்பாடு என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் திமுக குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்த விமர்சனங்களை மறந்துவிட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளனர்.
அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கூட்டு முயற்சியாலும், தூத்துக்குடி மக்களின் அன்பான ஆதரவாலும் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com