திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தார்.
சுவாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்தார். கோயிலிலுள்ள சம்ஹார மூர்த்தி சன்னதியில் நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் அவர் கலந்துகொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடி தொகுதியை மேம்படுத்துவது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வரும் 27 இல் வெளியிடப்படும். தூத்துக்குடியில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
கலந்துகொள்கிறார். ஊழல் இல்லாத, நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும். மக்களுக்கான அக்கறையை முன்னெடுத்து செல்வதுதான் என்னுடைய குறிக்கோள்.
இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில்தான். 1975 இல் அவசர நிலை பிரகடனம் செய்து அனைவரின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் ஆட்சியில்தான். அந்தக் கூட்டணியில் இருந்து கொண்டு கருத்து சுதந்திரம் குறித்து பேச திமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார் அவர்.
அப்போது, பாஜக மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.