அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் பிரதான சாலையில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் சேகர் (49). மணப்பாறையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இவர், வீட்டைப் பூட்டிவிட்டு, தனது மனைவி சந்திரபிரபா மற்றும் மகன் வினோத் பிரபு, மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
திங்கள்கிழமை காலை 9 மணியளவில் சேகர் மகன் வினோத்பிரபு மட்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், 5 ஜோடி கொலுசுகள்,120 கிராம் அரைஞான்கொடி மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுசெய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.