அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களில் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகமதுயூனுஸ்கான், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாணி, பாதுகாப்பு அலுவலர் செல்வராசு ஆகியோர் பங்கேற்று பேசுகையில், மாணவ பருவத்தில் ஏற்படும் தீய பழக்க வழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். விபத்து இல்லா பயணங்களை மேற்கொள்ள வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுகொள்ள வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகள் இருந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர்.
அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ச. நாகராஜன் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் தனபால் வரவேற்றார். பயிற்சியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். பயிற்சியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் 350 நபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.
வள்ளலார் கல்வி நிலையம்..அரியலூர் லிங்கத்தடி மேடு பகுதியிலுள்ள வள்ளலார் கல்வி நிலையத்தில் நடந்த விழாவுக்கு வள்ளலார் கல்வி நிலைய தலைவர் சீனி. பாலகிருஷணன் தலைமை வகித்து பேசினர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் க. முகமது யூனூஸ்கான் வள்ளலார் கல்வி நிலைய இணைச் செயலர் தமிழரசன்,செயற்குழு உறுப்பினர் பெ. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவா(எ)சிவசுப்ரமணி பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். இதேபோல மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.