அரியலூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளத்தைக் கண்காணத்திட 5 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும்,தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையருமான சந்தோஷ் கே. மிஸ்ரா தெரிவித்தார்.
அரியலூர் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும்,கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
அரியலூர் மாவட்டத்தில் மழையால் பாதிப்படையக்கூடிய 29 பகுதிகளை கண்காணித்திட 5 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் அனைவரும் முதல் நிலை மீட்பு குழுவினருடன் இணைந்து புயல் வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பணிகளை துரிதமாக செயல்படுத்துவர். எனவே பொதுமக்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் (பொ) லலிதா, கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.