இடநெருக்கடியில் அரியலூர் மைய நூலகம்: வாசகர்கள் தவிப்பு

போதிய இட வசதியின்றி நெருக்கடியில் இயங்கி வரும் அரியலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு விசாலமான

போதிய இட வசதியின்றி நெருக்கடியில் இயங்கி வரும் அரியலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு விசாலமான புதிய கட்டடம் அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 1958-ல் தமிழக அரசின் பொது நூலகத் துறை வாயிலாக கிளை நூலகம் அமைக்கப்பட்டது. சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நூலகம், அரியலூர் தனி மாவட்டமானபோது கடந்த 2009-ல்  மைய நூலகமாகச் செயல்படத் தொடங்கியது.
மிகக் குறுகலான அக்கட்டடத்திலேயே இயங்கி வரும் இந்த நூலகத்தில் போதுமான இட வசதி இல்லாததால் கடந்த 2010 ஆம் ஆண்டு நூலகக் கட்டத்தின் மேலே புதிய கட்டடம் கட்டப்பட்டு,  அங்கு தற்போது அலுவலகம் செயல்படுகிறது. ஆனாலும் இந்த நூலகத்தில் தற்போது வாசகர்கள் உட்காரக் கூட வசதியின்றித் தவித்து வருகின்றனர்.
இந்நூலகத்தில் தற்போது  பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1 லட்சம்நூல்கள் உள்ளன. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களும், 150 புரவலர்களும் உள்ளனர். நாள்தோறும் 1,000 வாசகர்கள் வந்து செல்கின்றனர்.
மிகக் குறுகலான நூலகக் கட்டடம் ஸ்திரத்தன்மையின்றி வலுவிழந்து காணப்படுவதால், அக்கட்டத்தைப் பராமரித்து விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், நூல்களை துறை வாரியாக வகைப்படுத்தி அடுக்கி வைக்கவு+ம், நூல்களை எளிதாக எடுத்து வாசித்தும், குறிப்பெடுத்து பயன்பெறுவதற்கும் போதிய இடவசதியின்றி, வாசகர்கள்  தவித்து வருகின்றனர். 
மேலும் இந்த நூலகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் போதிய வசதி இல்லை. ஏராளமான நூல்கள் வகைப்படுத்தி வைக்க இடமின்றி தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, நூலகத்தையொட்டியே சாக்கடை, ஆக்கிரமிப்புகள் இருப்பதால் நூலகத்தில் அமர்ந்து வாசிக்க முடியாமல் வாசகர்கள் உள்ளனர். 
அதனால் வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கே இடப்பற்றாக்குறை நிலவுவதால், அரசு வழங்கியுள்ள இணைய வசதியுடன் கூடிய கணினி முடங்கிக் கிடக்கிறது. 
எனவே, அரியலூர் மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதி, அரியலூர் மைய நூலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்க,அரியலூ மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி ,சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com