அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய அவரது மைத்துனரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உடையார்பாளையம் அருகிலுள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் பழனிசாமி(35).அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு, கடன் அதிகமாக இருந்ததால், தனது தோட்டத்தை விற்றுக் கடனை அடைத்தாராம். மீதமிருந்த ரூ.2 லட்சத்தை செலவு செய்து கொண்டிருந்ததாராம்.
இதனையறிந்த பழனிசாமி மனைவி உமாதேவி(30), மீதமுள்ள பணத்தில் வங்கியில் அடகில் இருக்கும் தனது நகைகளை மீட்டு தரும்படி கேட்டராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்த அறிந்த உமாதேவியின் சகோதரர் வெற்றிவேல்(40),
தனது உறவினர்கள் பிரபாகரன்,பாலு ஆகியோரை அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பழனிசாமி வீட்டுக்குச் சென்று,அங்கு அவரைத் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த பழனிசாமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து வெற்றிவேலை புதன்கிழமை கைது செய்தனர்.மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.