ஜயங்கொண்டம் அருகே அணைக்கரை கீழணை பாலத்தின் வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்கக்கோரி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஜயங்கொண்டம் குறுக்குச்சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை இணைக்கும் வகையில், அணைக்கரையில் கீழணை அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, பாப்பாகுடி, கங்கைகொண்டசோழபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்காண மாணவர்கள் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்தக் கீழணை பாலம் பழுதடைந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிருந்து செல்லும் மாணவர்கள் அணைக்கரை வடவார் தலைப்பு வரை பேருந்தில் சென்று தத்துவாஞ்சேரி வரை நடந்து சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை அவலநிலை இருந்து வந்தது.
கடந்த ஓராண்டுகாலமாக கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதியளித்து வந்த நிலையில், கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலம் பழுதடையலாம் என்ற அச்சத்தில் மீண்டும் பேருந்துகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் நாங்கள் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல இயலவில்லை. எனவே, அணைக்கரை கீழணை பாலத்தின் வழியாக மீண்டும் பேருந்து இயக்க அனுமதிக்கக் கோரி திங்கள்கிழமை காலை மாணவர்கள் ஜயங்கொண்டம் குறுக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸார் ள பொது பணித் துறை பாசன ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.