அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 303 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர், ஆட்சியரின் நிதியில் இருந்து 22 நலிந்த கலைஞர்களுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.பூங்கோதை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.