அரியலூர் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வங்கிக் கடன்கள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2018-19 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதி திராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோல் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், மூடநீக்கும் மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன் உதவி ஆகியவற்றிற்கு மானியத்துடன் கூடிய நிதிஉதவி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெறும் ஆதிதிராவிடர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.