அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வாங்கிய பருத்திக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவந்த வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜயங்கொண்டம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ஜயங்கொண்டம் அடுத்த கடம்பூர்கோவில்சீமை கிராமத்தில் 61 விவசாயிகளிடம் பருத்தி வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றிவந்த சுள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் வெற்றிச்செல்வன் (39), அவரது மனைவி ராஜலட்சுமி, மாமனார் சாமிநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பூரைச் சேர்ந்த காசிநாதன் (66) மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து ஜயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மதிவாணன், பருத்தி வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றிவந்த வெற்றிச்செல்வனுக்கு, ரூ. 2 ஆ யிரம் அபராதமும், 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.