அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது, கொள்ளிடம் பாலத்தில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என வலியுறுத்தி திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தொடர்ந்த வழக்கில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம், அந்த தடையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரத்து செய்தது.
இதையடுத்து, தமிழக அரசு கடந்த 4 நாள்களுக்கு முன்பு திருமானூர் கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைத்து, மணல் அள்ளி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மூ.மணியன் தலைமையில், லட்சிய திமுக மாவட்டச் செயலர் என்.வினோத்ராஜ், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், தேமுதிக ஒன்றிய (கி) அவைத் தலைவர் ஜெ.வெங்கடேஷ் உட்பட 15 பேர் கொள்ளிடம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமானூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 15 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.