அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே அரசு அதிகாரிகளை ஏமாற்றி உதவித் தொகை பெற்று வந்த முதியவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (64). இவரது மகன் மருதகாசி ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இதையடுத்து, ராஜமாணிக்கம், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பெயர் திருத்தம் செய்து, அரசு உதவித் தொகை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜயங்கொண்டம் வட்டாட்சியர் குமரய்யா, இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை சனிக்கிழமை இரவு கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.