அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயில் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஏகாந்த சேவை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ஏப்.13 -ல் திருவிழா தொடங்கி கலியுக வரதராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். கடந்த 19 ஆம் தேதி திருக்கல்யாணம், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தாண்டு விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டி, தங்கள் வயலில் விளைந்த நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை காணிக்கையாக அளித்தனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணாடி மணி விமானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வெள்ளிப் படிச்சட்டம் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைடைந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை,ஆதீன பரம்பரை தருமகர்த்தா கோ.கோவிந்தசாமி படையாச்சியார் குடும்பத்தினர் மற்றும் கல்லங்குறிச்சி பொதுமக்கள் செய்திருந்தனர்.