அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி காலனித் தெருவில் வன்முறையில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பாண்டியன் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
பட்டியல் சாதியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தாக்குதலுக்குள்ளான பட்டியல் சாதியினருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அவர்களுக்கு மருத்துவ வசதி, பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
பொன்பரப்பியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும். பட்டியல் சாதியினர் மீதான தாக்குதலில் இருந்து வெளியே வரமுடியாத அச்சத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும்.