அரியலூர் ஆட்சியரகத்தில், சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைத் தொழிலாளர் கணக்கெடுக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். சமூக நலத் துறை இயக்குநரும், இந்தத் திட்டத்துக்கான மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான வி. அமுதவள்ளி முன்னிலை வகித்தார். திட்டம் குறித்தும் இந்த கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். பின்னர் அவர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தேசிய தகவலியல் மையம் மற்றும் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இத்திட்டம் குறித்து அவர் தெரிவித்தது: இம்மாவட்டத்தில் இத் திட்டப்பணிகளுக்காக 520 கணக்கெடுப்பு பணியாளர்களும், 131 கணினி பணியாளர்களும் 12 மையங்களில் பதிவேற்றப்படுகிறது.
விண்ணப்பங்களை பணியாளர்கள் விவசாயிகளிடமிருந்து விரைவாகப் பெற்று பதிவேற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு,மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, கோட்டாட்சியர்கள் அரியலூர் சத்தியநாராயணன்,உடையார்பாளையம் ஜோதி, தேசிய தகவலியல் அலுவலர் ஜான் பிரிட்டோ, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, வட்டாட்சியர்கள் அரியலூர் கதிரவன்,ஜயங்கொண்டம் குமரைய்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.