அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சீருடை, காலணி, தளவாடப் பொருள்கள், ரெயின்கோட் போன்றவற்றை விரைந்து வழங்க வேண்டும்.
பணிப்பதிவேட்டில் தகுதி காண்பருவம், பணிவரன்முறை. தேர்வு நிலை, சிறப்பு நிலைப்பதியப்பட்டு அலுவலக உத்தரவு வழங்க வேண்டும், 7ஆவது ஊதியக்குழு விவரங்களை ஊழியர்களின் பணிபதிவேட்டில் பதிய வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.போராட்டம் காரணமாக, நகராட்சித் துப்புரவுப் பணிடயாளர்கள் அனைவரும் பணியைபுறக்கணித்து, நகராட்சி முன்பு தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி மேலாளர் பார்த்திபன், மற்றும் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் துப்புரவுப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.