அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை காலை அரசுப் பேருந்தும் தனியார் பள்ளி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
ஜயங்கொண்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி வேன், திங்கள்கிழமை காலை ஆண்டிமடம் பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது.
விருத்தாசலம் சாலையில் அருளானந்தபுரம் பகுதியில் சென்ற போது, ஜயங்கொண்டத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேன் மீது மோதியது.
மாணவ, மாணவிகளின் சப்தம் அறிந்து அங்கு வந்த கிராம பொதுமக்கள் வேனில் இருந்தவர்களை இறக்கினர்.
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் இருவர், வேன் ஓட்டுநர் சண்முகம் (28) ஆகிய மூவரையும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.