அரியலூர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளுக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை கல்வி சீர் வரிசைகளை வழங்கினர்.
திருமானூர் அருகேயுள்ள விழுப்பனங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலி உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை கிராம பொதுமக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
அதே போல், கரைவெட்டி பரதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை அக்கிராம மக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். கள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை கிராம மக்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். மேற்கண்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, சாந்திராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஜயங்கொண்டம் அருகேயுள்ள சின்னாத்துகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கீழகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அக்கிராம மக்கள் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தளவாட பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், அசோகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.