அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், சிமென்ட் ஆலைகளில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். வாங்கிய நிலங்களுக்கு நியாயமான விலையை வழங்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடுவதற்கு பதில், அவற்றை விவசாயிகளுக்கே வழங்க வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட மக்களுக்கு உற்பத்தி விலையில் சிமென்ட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலர் வே. சாமிநாதன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் கண்ணன், மாநில அமைப்புச் செயலர் சின்னதுரை, மாநில இளைஞரணி துணைச் செயலர் அண்ணா பகுத்தறிவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.