அரியலூர் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமானூர்,கரைவெட்டி,அன்னிமங்கலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மேற்கண்ட ஊர்களிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்ற ஆட்சியர் மு.விஜயலட்சுமி அங்கு, கணக்கெடுக்கப்பட்டு,தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் தங்களது பெயர்கள் பட்டியலில் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களாக கருதப்படும் பெயர்கள் இப்பட்டியலில் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் கதிரவன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.