அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காலை, மாலைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டத்தில் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மாணவ,மாணவிகள் வெள்ளிக்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது, போதுமான பேருந்துகள் இல்லாததால் வந்த பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் அவதியடைந்த மாணவர்கள் ஜயங்கொண்டம் தா.பழூர் சாலையில் பிள்ளையார்கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் போலீஸார் கூடுதல் பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.