அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கிய 2 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
செந்துறை அருகேயுள்ள ஆர்.எஸ். மாத்தூரில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கடந்த 17 ஆம் தேதி அன்று அருகேயுள்ள உஞ்சினி கிராமத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் அவரச கால மருத்துவ நிபுணர் செந்தில், ஓட்டுநர் செல்வகுமார் இருவரும் உஞ்சினி கிராமத்துக்கு சென்று, செல்பேசியில் அழைப்பு விடுத்தவரைத் தொடர்பு கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த 3 பேர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில், ஓட்டுநர் செல்வகுமார் காயமடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கிய உஞ்சினி கிராமத்தை சேர்ந்த முத்து மகன் சுரேஷ், அண்ணாதுரை மகன்கள் விஜய் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், சுரேஷ் மற்றும் விஜயைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அருணைப் போலீஸார் தேடி வருகின்றனர்.