அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து காணாமல் போன வீரபத்திரர் சாமி வெண்கல சிலை ஞாயிற்றுக்கிழமை ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே அம்பாபூரில் பழைமையான பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அம்பாபூர், விக்கிரமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40 குடும்ப வகையறாக்களுக்கு சொந்தமான குல தெய்வமாகும்.
இந்நிலையில், இந்தக் கோயிலில் இருந்த 1 அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட வீரபத்திரர் சுவாமி வெண்கல சிலையை மர்ம நபர்கள் கடந்தாண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அதே ஊரில் உள்ள பெருமாள் படையாட்சி ஏரியில் உள்ள தண்ணீரை விவசாயிகள் தங்களது வயல்களுக்கு மோட்டார் மூலம் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, ஏரியில் காணாமல் போன வீரபத்திரர் சிலை கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார் சிலையை காவல் நிலையம் கொண்டு சென்று மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.