அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியில் பல்வேறு வசதிகள் கொண்ட புதிய கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு, ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று பூமி பூஜையைத் தொடக்கி வைத்து,பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜயங்கொண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மருத்துவமனை விரிவாக்க திட்டத்துக்கு ரூ.20 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, தற்போது கட்டடங்கள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும் நடைபெற்றுள்ளது.
குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய் சிகிச்சை பிரிவுகள் அதிநவீன வசதிகளுடன் இந்த கட்டடத்தில் அமைக்கப்பட உள்ளது என்றார் தாமரை எஸ். ராஜேந்திரன்.
அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் உஷாசெந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் பிரேமலதா, உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், மாவட்டத் துணைச் செயலர் தங்கபிச்சமுத்து, மருத்துவர்கள் மதியழகன், ரவிச்சந்திரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்றனர்.