மணல் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திருப்பி தர மறுக்கும் போலீஸாரைக் கண்டித்து சனிக்கிழமை இளைஞர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திருமானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள காரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(30). இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டு கட்டுமானப் பணிக்காக அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து தனது இருசக்கர வாகனம் மூலம் மணலை சாக்குகளில் கட்டி எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் இருந்த திருமானூர் போலீஸார், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து ராமச்சந்திரன் மீது வழக்கு பதிந்ததுடன், அரியலூர் ஆர்.டி.ஓ விடம் சென்று வழக்கை முடித்து வாகனத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 3 மாதங்களாக தன்னை அலைக்கழிப்பதாகக் கூறி காரைப்பாக்கம் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது ராமச்சந்திரன் ஏறி தற்கொலை முயற்சியில் சனிக்கிழமை ஈடுபட்டார்.
தகவலறிந்து சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கி வரச் செய்தனர்.