தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவற்றை அனைத்து கட்சியினரும்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவற்றை அனைத்து கட்சியினரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மு.விஜயலட்சுமி.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான தேர்தல் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது: 
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நன்னடத்தை விதிகளை அனைத்து கட்சியினரும் பின்பற்றி அதன்படி நடக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. 
வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. பிற அரசியல் கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களை பேசிட அனுமதியில்லை. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள்,  துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. தேர்தல் குற்றங்களான வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்களர்களை மிரட்டுதல், வாக்கு பதிவு மையத்திலிருந்து 100 மீ. தொலைவிற்குள் வாக்கு சேகரித்தல், வாக்கு பதிவிற்கு 48 மணி நேரத்திற்குள் கூட்டங்கள் நடத்துதல், வாக்களர்களை தங்களது வாகனங்களில் வாக்கு பதிவு மையங்களுக்கு அழைத்து வருதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 6 வரை ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஊர்வலம் மற்றும் பொது கூட்டங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டங்கள் இரவு 10 மணிக்கு மேல் நடைபெறக்கூடாது. கூட்டத்தில், கோட்டாட்சியர்கள் அரியலூர் சத்தியநாராயணன், உடையார்பாளையம் ஜோதி, வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
 


எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கு சீல்
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையொட்டி, மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கவும், அவர்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை திரும்ப பெறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 
அதன்படி, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் அலுவலகத்தை கோட்டாட்சியர் சத்தியநாராயணன் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தார். இதேபோல் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் அலுவலகத்தையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி விளம்பரத்தட்டிகளை கட்சியினர் தாமாகவே முன்வந்து அகற்றி தேர்தல் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com