அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்கள், கருத்துகள் மற்றும் புகார்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணு விளம்பரத் திரை வாகனப் பயணத்தை ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த பின்னர், மேலும் அவர் கூறியது:
வாக்களிப்பதின் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதிசெய்தல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மின்னணு விளம்பரத்திரை வாகனப் பயணமும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை
தெரிந்து கொள்ளவும், புகார் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை இயங்குகிறது. இச்சேவை மையம் காலை 9 முதல் இரவு 9 மணி வரை இயங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் க.சரவணன், அ.எழிலரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.