தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர்
தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் திருமண மண்டபம், பிளக்ஸ், பிரிண்டிங் பிரஸ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது:
டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள், பிளக்ஸ் பிரிண்டிங் அடிப்பதற்கான அனுமதியைப் பெற வேண்டும். பிளக்ஸ் பிரிண்டிங் செய்யும்போது அதில் அனுமதி பெற்ற எண், பிரிண்டிங் அச்சக பெயர், எண்ணிக்கை உள்ளிட்டவை பிரிண்டிங் செய்ய வேண்டும்.
திருமண மண்டபம், மீட்டிங் ஹால் உரிமையாளர்கள், அரசியல் கட்சி கூட்டங்களை உரிய அனுமதி பெற்றபின் நடத்த அனுமதிக்க வேண்டும். எந்தக் கட்சியினர் கூட்டங்கள் நடத்தினாலும் காவல் நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேரம் முன்பு மண்டபம், விடுதிகள் ஆகியவற்றில் வெளியூர் நபர்கள் தங்கியிருந்தால் உடனே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை மீறும் பிளக்ஸ் அச்சகங்கள், பிரஸ் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், லாட்ஜ், மீட்டிங் ஹால் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.