அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ.16.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும்,ஆட்சியருமான மு.விஜயலட்சுமி.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றறது. இக்கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியது:
மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.வாகனத் தணிக்கையில் இதுவரை ரூ.16.55 லட்சம் ரொக்கத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைவரும் தவறாமல் கடைபிடித்து மக்களவைத் தேர்தலை சிறந்த முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்துக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் துர்காதத் தலைமை வகித்தார். வருமானவரித் துறை துணை இயக்குநர் கண்ணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, கோட்டாட்சியர்கள் அரியலூர் நா.சத்தியநாராயணன் உடையார்பாளையம் ஜோதி, பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) மஞ்சுளா உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.