மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாகக் கூறி ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலூர் கிராம மக்கள் வியாழக்கிழமை தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் .
கடந்த 1992 ஆம் ஆண்டில் ஜயங்கொண்டத்தை சுற்றியுள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 22 ஆயிரம் பேரிடம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண இரண்டு நீதிமன்றங்களை அமைத்து தீர்ப்பு வழங்கியும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால், சொந்த ஊரில் அகதிகளாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். இல்லையேல், திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களிடம் நிலத்தை திருப்பி வழங்க வேண்டும். இல்லையெனில் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாகக் கூறி ஜயங்கொண்டம் அருகேயுள்ள மேலூர் கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸார், ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வருவாய் அலுவலர் திலகவதி, விஏஓ குருமூர்த்தி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.