மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியலூரில் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி,முக்கிய சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்.
அரியலூர் வருவாய்க் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன், அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்றனர்.