காவிரி ஆறுப்பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரைமீட்டுத் தர வேண்டும் எனக் கோரி , கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அப்பெண்ணின் தாயார் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், ஆட்சியர் த. அன்பழகனிடம், ராஜேந்திரம் மணல்குவாரியைத் தடை செய்ய வேண்டும், காவிரியாற்றில் மணல் அள்ள அனுமதிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆறுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ராஜேசுவரி உள்ளிட்டோர் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, அங்கு வந்த நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் முருகேசன் மனைவி கஸ்தூரி (55) , தனது மகள் ராஜேசுவரி மற்றும் முகிலனைக் கண்டதும், ஆவேசத்தில் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பது:
எம்.எஸ்.சி. பட்டதாரியான எனது மகள் ராஜேசுவரி (30) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குமாரபாளயம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தேன்.
இந்த நிலையில், கடந்த வாரம் கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், காவிரி ஆறுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனுடன் எனது மகள் வந்து மனு அளித்ததை நாளிதழ்களில் கண்டேன்.
இதுகுறித்து முகிலனைத் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை. தனது மகளை முகிலன் கடத்திச் சென்றுவிட்டதாகவும், 3 மாதங்களுக்குப் பின்னர் தற்போதுதான் மகளைப் பார்ப்பதாகவும், மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவந்தநிலையில் திடீரென சமூக போராட்டத்திற்குச் சென்றுவிட்டார். எனவே அவரை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர், உங்கள் மகள் 18 வயதைக் கடந்தவர் என்பதால், தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளது. எனவே நீதிமன்றத்துக்குச் சென்று பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.நான் என் விருப்ப்படிதான் இந்த இயக்கத்தில் சேர்ந்து சமூகத்துக்குப் போராடி வருகிறேன். என்னை யாரும் கடத்தவில்லை என்றார் ராஜேசுவரி.