வங்கிகளால் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கு தற்போது கருவூலத்துறையின் மூலமாக வழங்கப்படுகிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் அதற்கான வாழ்நாள் சான்றிதழை கருவூலங்களில் அளிக்க வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்கள் பல சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்த சிரமங்களைக் குறைத்து, அவர்கள் நலன் காக்கும் வகையில், பொதுத்துறை வங்கித்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70,000 பேர் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கி திட்டத்திலுள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர்.
தற்போது வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் தங்களது அனைத்து ஓய்வூதிய பதிவேடுகளையும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்களில் 2019 ஏப்.1-ம்தேதி முதல் ஜூன் 30-ம்தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.