கரூரில் ரூ.269.59 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து முன்கூட்டியே முடிக்க அதிகாரிகளுக்கு மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் காந்திகிராமம் அருகே நடைபெற்றுவரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது:
கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணிகள் கடந்த 1.3.2018 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 31.3.2019-க்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ரோஸி வெண்ணிலா, மருத்துவ கட்டடங்கள் செயற்பொறியாளர் இளஞ்செழியன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மகாவிஷ்ணு, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.