கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பூமிபூஜையை மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டபுன்னம் ஊராட்சியில், கரூர் - ஈரோடு சாலை முதல் பழமாபுரம் (வழி) ஏபி நகர் வரை ரூ.39.66 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் பணி, புன்னம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.4 லட்சம் மதிப்பில் மயானக் கொட்டகை அமைக்கும் பணி, எம்.ஜி.ஆர். நகரில் ரூ.7.25 லட்சம் மதிப்பில் 60,000 லி. கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, , தென்னிலை மேற்கு ஊராட்சி, தென்னிலையில், சின்னதாராபுரம்-கொடுமுடி சாலை முதல் வைரமடை-குப்பம் சாலை (வழி) புளியம்பட்டி, கள்ளிகாட்டூர் குமாரவலசு (தென்னிலை குமாரவலசு சாலை) வரை ரூ.47.11 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்யும் பணி, கோடந்தூர் என மொத்தம் ரூ.3.04 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். மேலும், எலவனூர் பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
முன்னதாக, புன்னம் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகரில் பாறை குழியில் தேங்கியிருக்கும் மழை நீரில் வளரும் கொசு புழுக்களை உணவாக உட்கொல்லும் கம்பூசியா மீன் குஞ்சுகளை விட்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிக்குமார், கிறிஸ்டி, வட்டாட்சியர் பிரபு (அரவக்குறிச்சி), கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், எஸ். திருவிகா, பி.மார்கண்டேயன், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.