பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையில் 9 வாகன ஓட்டிகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து ஆணையாளரின் உத்தரவின்படி நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) வெங்கடேசன் தலைமையிலான வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா, மாவட்ட செயலாக்கப் பிரிவு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், புஷ்பா மற்றும் போலீஸார் பரமத்தி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் தலைக் கவசம் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணியாமலும், அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள், பிரதிபலிக்கும் பட்டைகள் ஓட்டாமலும் இயக்கியது உள்ளிட்ட 9 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதர குற்றங்களுக்காக 29 வாகனங்களுக்கு ரூ.17 ஆயிரம் இணக்கக் கட்டனம் நிர்ணயிக்கப்பட்டு, வாகனத் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.