குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு கரூர் அன்னை வித்யாலயா, வெற்றி விநாயகா பள்ளிகளில் நடந்த போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா பள்ளியில் புதன்கிழமை நடந்த குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர். மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் குழந்தைகள் மறைந்த பிரதமர் நேருவின் பிறந்த தினம் குறித்து பேசினர்.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அக்னீஸ் கல்விக் குழும உறுப்பினர் ராஜேந்திரன், பள்ளி நிர்வாக இயக்குநர் பகலவன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் குழந்தைகள் ஸ்லோகம் கூறுதல், திருக்குறள், பழமொழிகள் ஒப்பித்தல், தமிழ், ஆங்கிலத்தில் பாடல்கள் பாடுதல், கிராமிய நடனம், நாடகம் மற்றும் கவிதை வாசித்தல் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் நேருவைப் பற்றி உயரிய கருத்துகளை கூறினர். பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர். சாமிநாதன் தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் பி. பழனியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டி.பிரகாசம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாந்தோன்றிமலை மலர்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பங்கேற்று போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளித் தாளாளர் பேங்க் கே. சுப்ரமணியன், துணை முதல்வர் ஜெயசித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.