சில அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே விவசாயம் செய்வதாக நாடகமாடுகிறார்கள் என்றார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி.
கரூரில் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியது: அரசியல் அமைப்புச் சட்டத்தில் கள் இறக்க அனுமதி இருப்பதை மதுவிலக்குச் சட்டம் தடைபோடுகிறது என்றால் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் மதுவிலக்கு சட்டம் இல்லை என்பதற்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். வரும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தேர்தலில் கள் இயக்கம் சார்பில் இயக்க மாநில அமைப்பாளர் இல.கதிரேசன் போட்டியிட உள்ளார்.
மீதமுள்ள 19 தொகுதிகளிலும் போட்டியிட ஆலோசித்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் விற்கப்படவில்லை, இன்று நாட்டில் நடக்கும் வணிகத்தில் குடிநீர் வணிகம் முதலிடத்தில் உள்ளது. காற்று மாசு காரணமாக புதுதில்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் சமையலுக்கு எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவது போல சுவாசிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கக்கூடிய காலம் வரும். சில அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே விவசாயம் செய்வதாக நாடகமாடுகிறார்கள். அவர்களுக்குத்தான் அரசின் சலுகைகள் செல்கின்றன.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, உரச்சலுகை வழங்கினால் மட்டும் போதாது. சம்பளக்கமிஷன் போல விவசாயக்கமிஷனும் அமைக்கப்பட வேண்டும் என்றார்.