குடிபோதையில் பெண் உள்பட 3 பேர் மீது பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த குழந்தாய்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி தாமரை (48). இவர் தனது தோட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலூரைச் சேர்ந்த மணிகண்டன், ஆனந்த், ரத்தினம் ஆகியோர் ஆடுகளை போதையில் உதைத்தனர். இதுகுறித்து தாமரை அவர்களிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து தாமரையை பீர் பாட்டிலால் தாக்கினர். இதை தட்டிக் கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (53), மாணிக்கசுந்தரம் ஆகியோரையும் பீர் பாட்டிலால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த மூவரம் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தாமரை அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து மணிகண்டன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.