கரூரில் புதன்கிழமை மாலை லேசான மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவாகி நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக சேதத்தை உருவாக்கிய கஜா புயலின் தடம் மறையாத நிலையில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவும் லேசான மழை பெய்தது. கரூர் நகர் பகுதியில் மட்டும் 11.2 மி.மீ. மழை பெய்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் 6.10 வரை சுமார் 10 நிமிடங்கள் லேசான மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல தாழ்வான பகுதி நோக்கி ஓடியது. கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்): கரூர்-11.2, கிருஷ்ணராயபுரம்-5.4, மாயனூர்-5 என மொத்தம் 21.60 மி.மீ. மழை பெய்தது.