கரூர் அருகே சொத்துக்காக தந்தையை எரித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகிலுள்ள வாங்கலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் கந்தசாமி (72). இவருக்கும், இவரது மகன் தங்கவேலுக்கும் (40) சொத்துத் தகராறு இருந்து வந்ததாம்.
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி மீது தங்கவேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து, தங்கவேலைத் தேடி வந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு வாங்கல்- மோகனூர் காவிரியாற்றுப் பாலத்தில் தங்கவேல் நடந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.