கரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி. பார்த்திபன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன், மாவட்டத் தலைவர் நிர்மல்ராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ராமர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மத்திய அரசில் உள்ள 24 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசுத் துறையில் உள்ள 4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்கான புதிய தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.