கரூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுமியின் தந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கொடுமுடி ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(34). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் மனைவி புவனேஸ்வரி (29), மகள்கள் தாரணி (8), தர்ஷனா(5) ஆகியோருடன் கரூரில் உள்ள உறவினரைப் பார்த்துவிட்டு மீண்டும் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பண்டுதகாரன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே பைக் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த சிறுமி தர்ஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் உள்ளிட்டோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்கு பதிந்து பைக் மீது மோதிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனர்.