கள்ளுக்கு தடையை நீக்கக் கோரி சென்னையில் வரும் 2019 ஜன.21-இல் அசுவமேத யாகம் நடத்த உள்ளோம் என்றார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி.
கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது: அரசியலமைப்புச் சட்டத்தில் கள் ஓர் உணவுப்பொருள் என்று உள்ளது. ஆனால் கள்ளுக்கு தடை விதிப்பது அநீதி. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்த உள்ளோம். கள்ளுக்கான தடையை விலக்கக் கோரி சென்னையில் வரும் 2019 ஜனவரி 21 ஆம் தேதி அசுவமேத யாகம் நடத்த உள்ளோம். இப்போதும் எங்களுடன் விவாதித்து கள் போதை பொருள் என நிரூபித்தால் கள் இயக்கத்தையே கலைத்துவிடுகிறோம்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு எத்தனால் உற்பத்தியை பெருக்கினால் மட்டுமே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும். ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31-வரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரை கடந்த ஒரேமாதத்தில் வழங்கிவிட்டோம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகிறார். மழைநீரை சேமிக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்றிவிட்டு இப்போது தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை கொடுத்துவிட்டோம் என அம்மாநில முதல்வர் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனால்தான் தினந்தோறும் நீர் பங்கீட்டை கள் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழகத்திற்கு நீர்ப்பாசனத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்து நீதிமன்றம்தான் திடமான முடிவை எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஆளுநர் முடிவெடுப்பார் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.