கரூர் வெண்ணைமலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில் வளாகத்தை சுற்றிலும் கிரிவலப்பாதை, தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் நடைபாதை தளம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது: கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில் வளாகத்தில் பூங்கா அமைக்கவும், கோயில் முன்புறம் வண்ணக் கல்பதித்து திருக்கோயிலைச்சுற்றி திருத்தேர், பக்தர்கள் கிரிவலம் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபாதை அமைத்து குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படவும் உள்ளது. மேலும், நகரின் மையப்பகுதியில் வசிப்பவர்களுக்கு திருவள்ளுவர் மைதானத்தில் மேற்கு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உள்அரங்க உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், பழைய அமராவதி பாலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள பாலத்தை சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.