செல்லிடப்பேசி திருடியதாகக் கூறி 15 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் மீது வெள்ளியணை போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். ஒருவரை விசாரித்து வருகின்றனர். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த அள்ளாளிக்கவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி - இளஞ்சியம் (35) தம்பதிக்கு பாலசுப்ரமணி(15), நந்தினி(10) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பழனிசாமி கடந்த இரு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இளஞ்சியம் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்துவந்தார்.
ஜெகதாபியில் உள்ள அரசுப் பள்ளியில் பாலசுப்ரமணி 8 ஆம் வகுப்பும், நந்தினி 5 ஆம் வகுப்பும் படித்து வந்த நிலையில், பாலசுப்ரமணி கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான்.
இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் தாய் வீட்டில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பூட்டை உடைத்து ரூ.3,000 பணம் திருடு போயுள்ளது.
மேலும் சனிக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டுக்குள் இருந்த செல்லிடப்பேசியும் திருடுபோயுள்ளது.
பாலசுப்ரமணி தான் திருடியுள்ளதாக நினைத்த பழனிசாமி, முனியாண்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(39), மணிவேல், முனியப்பன் ஆகியோர் சனிக்கிழமை சிறுவன் பாலசுப்ரமணியை அவரது வீட்டின் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கியுள்ளனர்.
மேலும், சிறுவனின் தாய் இளஞ்சியம், தங்கை நந்தினி ஆகியோரை ஊருக்கு வெளியே உள்ள சமுதாயக் கூடத்துக்கு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டனர்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, பாலசுப்ரமணி இறந்து கிடந்தான்.
புகாரின்பேரில், வெள்ளியணை போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வகுமாரைப் பிடித்து விசாரிக்கின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள பழனிசாமி, முனியாண்டி, மணிவேல், முனியப்பன் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.