கரூர் அருகே தொழில் தொடங்கப்பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மகனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் அருகே உள்ள என். புதூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (65). இவர், அதே பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் தங்கவேல் (45). இவர், கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் தங்கவேலு குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் வேலைக்கும் செல்லாமல் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவாராம். சில நேரங்களில் தந்தையைத் தாக்கிவிட்டு அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவாராம். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் தங்கவேலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேல், கடந்த 19 ஆம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மீண்டும் பழையபடி மதுகுடித்து வந்துள்ளார்.
இதனிடையே சனிக்கிழமை இரவு தந்தையிடம் தொழில் தொடங்க ரூ.50,000 கொடுங்கள் எனக்கேட்டுள்ளார்.
இதற்கு கந்தசாமி மறுத்துவிட்டு, வீட்டின் முன்பு கட்டில் போட்டு தூங்கச் சென்றுவிட்டாராம். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென பெட்ரோல் கேனுடன் வந்த தங்கவேல், தந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு ஓடிவிட்டார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து கந்தசாமியை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கந்தசாமி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தங்கவேலைப் போலீஸார் தேடி வருகின்றனர்.